Sunday, January 29, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -அறுபத்தி நான்கு

     ஸ்ரீ ராமர்  ரிஷிகளுடன் உணவருந்திவிட்டு  ஓய்வு  எடுத்துக் கொண்டிருந்தார்.  லக்ஷ்மணனுக்கு  நகரை சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
ஆனால் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. அண்ணனிடம் கேட்க பயமாக இருந்தது.

ஆனால் சகலமும் அறிந்த ஸ்ரீ ராமருக்கு தன் தம்பியின் மனதில் உள்ள   ஆசை புரிந்துவிட்டது. அவர் முனிவரிடம் சென்று  தன் தம்பியின்  விருப்பத்தைக்கூறி நகரை சுற்றிப்பார்த்து வர  அனுமதி கேட்டார்.
முனிவர் நகரைச் சுற்றிப்பார்க்க  அனுமதி அளித்தார்.
அப்பொழுது முனிவர் ,"ராமா!நீ நீதியைக் காப்பவன். அன்பின் வசப்பட்டு சேவகர்களுக்கு சுகம் அளிப்பவன்.
தர்ம ரக்ஷகன்.  நகரத்தின் அழகையும் ,பார்த்து நகரமக்களுக்கும்  காட்சி அளித்து   மகிழ்விக்கவும்.

 எல்லா உலகத்திற்கும் சுகம் தரக்கூடிய இரண்டு  சகோதரர்களும்  ரிஷியை வணங்கி விட்டு  நகர்வலம்  காணச் சென்றனர். இவர்கள் வெளியில் வந்ததுமே ,
இவர்களுடைய அழகால் மகிழ்ந்து பாலகர்களின் கூட்டம்
இவர்களைப் பின் தொடர்ந்தது.

இரண்டு சகோதரர்களின்  மஞ்சள் நிற பட்டாடை, இடுப்பின் துப்பட்டாவில் கட்டப்பட்டுள்ள அம்பராத்தூண் , கருப்பு ,வெள்ளை உடலுக்கேற்ற சந்தனத் திலகம் ,மிகவும் அழகாக
இருந்தன.  கருப்பான ராமர், வெள்ளை நிற லக்ஷ்மணர் இந்த
அழகான  ஜோடி  அனைவருக்கும் பார்க்க பார்க்க மிக ஆனந்தம் அளித்தது.

சிங்கம் போன்ற கழுத்து ,மிகப்பெரிய புஜங்கள், மார்பில்
கஜமுத்துமாலை  அழகான  செந்தாமரைக் கண்கள்,  நிலவுபோன்ற முகம் மூன்று தாபங்களையும் போக்கக் கூடியது.
காதுகளில் தங்க காதணிகள்  மிகவும் அழகாக அனைவரையும்  கவர்ந்தது.  புருவங்கள் வளைந்து மிகவும் சோபித்தன. நெற்றியில் திலகக் கோடுகள் அழகில் முத்திரையிட்டதுபோல் இருந்தன.
தலையில்  கருப்பான சுருட்டை முடிகள் அதன் மேல் ஜடாமுடி மிக அழகாக இருந்தன. பாதங்களிலிருந்து  தலை வரை
அனைத்துமே பார்க்க மிக அழகாக இருந்தன.
இரண்டு சகோதரர்களும் நகரத்தைப் பார்க்க வந்துள்ளனர் என்ற செய்தி கேட்டதுமே, எல்லோரும் தங்கள் வீட்டையும் வேலைகளையும் வீட்டு விட்டு  தரித்திரன் கஜானா கொள்ளை அடிக்க ஓடிவந்தது போல் ஓடிவந்தனர்.
இயற்கையான அழகுள்ள சகோதரர்களைக் கண்டு நகர மக்கள் மகிழ்ந்தனர். வீட்டின் பெண்கள் ஜன்னல் வழியாக அன்புடன் ராமச்சந்திர மூர்த்தியைப் பார்த்தனர்.
பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்---
இவர்கள் கோடிக்கணக்கான காமதேவனின்  அழகை
மொத்தமாக பெற்றுள்ளனர். இவ்வளவு அழகு எங்கும் பார்க்கக் கிடைக்கவில்லை. தேவர்கள், மனிதர்கள் ,
அசுரர்கள், முனிவர்கள், நாகர்கள்  ஆகியோரிடத்திலும்
இவ்வளவு அழகு இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை.

பகவான்  விஷ்ணுவிற்கு  நான்கு புஜங்கள் உள்ளன. பிரம்மாவிற்கு நான்கு முகங்கள் உள்ளன.
சிவனின் வேஷம் மிகவும் பயங்கரமானது. அவருக்கு ஐந்து முகங்கள்.  இந்த அழகுக்கு சமமான உவமை எதுவும் இல்லை.
இவ்வளவு அழகானவர்களைக் கண்டு  மோகிக்காதவர் ஒருவரும் இருக்கமுடியாது.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"இவர்கள் மகாராஜா தசரதரின்  குழந்தைகள் என்று கேள்விப்பட்டேன். இவர்கள் அன்னப்பறவைகள் போன்று அழகான ஜோடி.
இவர்கள் விஷ்வாமித்திரரின் யாகத்தின் காவலாளிகள்.
இவர்கள் போர்க்களத்தில் ராக்ஷசர்களைக் கொன்றுள்ளனர்.

   இதில்  கருப்பாக இருப்பவர் மாரீசன்,சுபாஹுவின் ஆணவத்தை அழித்தவர். இவர் கௌசல்யாவின் புத்திரர்.
இவருடைய பெயர் ராமர்.

 வெள்ளையாக வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு  பின் தொடருபவர்   ராமரின் சகோதரர் லக்ஷ்மணன். அவருடைய தாயார் சுமித்திரை .
இரண்டு சகோதரர்களும்   அரக்கர்களை அடக்கி வரும் வழியில்  கௌதமரின்  மனைவி அஹல்யாவிற்கு முக்தி அளித்து   இங்கு தனுஷ் யக்ஞம் காண வந்துள்ளனர்.
இதைக்கேட்ட தோழிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
 ராமரின் அழகைக்கண்டு ஒரு தோழி ,"ராமர் ஜானகிக்கு ஏற்ற வரன் "என்றாள்.
அரசன் இவரைப்பார்த்தால், தன் பிரதிக்ஞையை  விட்டுவிட்டு  ராமருடனேயே திருமணம் செய்துவிடுவார்.
அப்பொழுது ஒரு தோழி சொன்னாள்,"அரசர் பார்த்துவிட்டார்.
முனிவருடன் இவருக்கும் தக்க மரியாதை செய்து கௌரவித்துள்ளார். ஆனால்  தோழியே! அரசர் தன பிரதிக்ஞையை  விடவில்லை.
தன் பிரதிக்க்னையில் திடமாக இருப்பதால்  அவிவேகி ஆகிவிட்டார்.
 ஒரு தோழி சொன்னாள்."கடவுள்  நல்லவராக இருந்தால்,
எல்லோருக்கும் தகுந்த பலன் அளிப்பவராக  இருந்தால் ,
ஜானகிக்கு இந்த வரம் தான் . இதில் சற்றும்  ஐயமில்லை.

 தெய்வ சங்கல்பத்தால்  இந்த வரன் ஜானகிக்கு கிட்டினால்
   நாம் எல்லோரும்  பகவானுக்கு  மிகவும் நன்றிக் கடன் பெற்றவராவோம்.  

No comments: